

சென்னை,
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் மது விற்கக்கூடாது என்று மது பார்கள், மனமகிழ் மன்றங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் சமூகப்பொறுப்புணர்வு மிக்க சூழலை உருவாக்கும் நடவடிக்கைகளை உறுதியுடன் தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் உரிமம் பெற்ற அனைத்து எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 வளாகங்களிலும் (நட்சத்திர ஓட்டல் மதுபார்கள், தங்கும் விடுதிகள், மனமகிழ் மன்றங்கள்) அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த உத்தரவின்படி 21 வயதுக்கு குறைவான எவருக்கும் மதுபானம் விற்கப்படவோ, வழங்கப்படவோ, வினியோகிக்கப்படவோ அல்லது பரிமாறப்படவோ கூடாது. ஒருவரின் வயது குறித்து சந்தேகம் இருந்தால், மதுபானம் வழங்குவதற்கு முன் அவரது வயதுக்கான செல்லுபடியாகும் ஆவணச்சான்றுகள் சரிபார்க்கப்பட வேண்டும்.
அனைத்து எப்.எல்.2 உரிமம் பெற்ற கிளப்புகளும், தங்களது பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அவர்களது தகுதியுடைய விருந்தினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும்.
எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 பார்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு நேரங்கள், எந்தவித விலகலும் இன்றி கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். எப்.எல்.2 உரிமம் பெற்ற கிளப்புகளில், பார் செயல்பாடு அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். கிளப் நிர்வாகங்கள், கிளப் நிறுவப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப பிற பொழுதுபோக்கு, கலாசார, விளையாட்டு மற்றும் சமூகச் செயல்பாடுகள் தொடர்ந்து மற்றும் பயனுள்ளதாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த அறிவுறுத்தல்களை அனைத்து உரிமதாரர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், அதன் கீழ் இயற்றப்பட்ட விதிமுறைகள் அல்லது உரிம நிபந்தனைகள் ஆகியவற்றின் ஏதேனும் மீறல்கள் மிகவும் தீவிரமாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.