

சென்னை
அமலாக்க துறை சோதனையை தொடர்ந்து சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மூடப்பட்ட 12 ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தவெக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், 13 இடங்களில், நீர்வளத் துறை வாயிலாக மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த குவாரிகளில், சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, ஒப்பந்ததாரர்கள் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டது. இதில், அமலாக்கத் துறை சோதனையை அடுத்து, மணல்குவாரிகள் மூடப்பட்டன. இதன்பின்னர், விழுப்புரம்,கடலூர்,திருச்சி,நாமக் கல், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க, சுற்றுச்சூழல் துறை அனுமதி கடந்த ஆண்டு பெறப்பட்டது.
இதில், லாரிகளில் மணல் ஏற்றும் ஒப்பந்ததாரராக யாரை நியமிப்பது என்பதில்,கடந்த திமுக ஆட்சியில் முடிவு ஏற்படவில்லை. இதனால், தேர்தல் முடிந்த பின், மணல் குவாரிகள் திறப்பு விவகாரத்தை கையில் எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்காரணமாக, மணல் குவாரிகள் திறக்கப்படாமல் முடங்கின.
இந்நிலையில், தேர்தல் முடிந்து புதிய அரசுபொறுப்புக்கு வந்துள்ள நிலையில், மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என,லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் 2.5ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 10 முதல் 12 மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மணல் குவாரிகளில் பெரும்பாலானவை டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமையவுள்ளன.
கடந்த 2017ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் மணல் விற்பனை முறை பின்னர் தனியார் ஒப் பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால், பெரிய அளவிலான முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத மணல் அள்ளும் செயல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த முறை மணல் குவாரிகளை ஆன்லைன் மூலம் அரசே நேரடியாக இயக்கப் பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில் மணல் எடுப்பதற்கு உகந்த சுமார் 600 கி.மீ முதல் 650 கி.மீநீள முள்ள ஆற்றுப்படுக்கைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.