

சென்னை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
விவசாயிகளின் நலனுக்காகச் சட்டப்பூர்வமாகவும், சனநாயக வழியிலும் தொடர்ந்து போராடி வரும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை, வீட்டுக்காவலில் வைத்து அவரது குரலை ஒடுக்க முயற்சிப்பது சனநாயகத்திற்கு எதிரான செயல். கருத்தை எதிர்கொள்ள முடியாத ஆட்சிகள்தான் அடக்குமுறையை ஆயுதமாக்கும்.
கர்நாடக அரசு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் மேகதாது அணை உள்ளிட்ட பிரச்சினைகளில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கோரி போராட்டம் அறிவித்த விவசாய சங்கத் தலைவரை, வீட்டுக்காவலில் அடைப்பது தமிழக அரசின் தவறான அணுகுமுறையாகும். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், அய்யாக்கண்ணு மீதான வீட்டுக்காவல் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உடனடியாக வீட்டுக்காவல் நடவடிக்கையை திரும்பப் பெற்று, விவசாயிகளின் சனநாயக உரிமைகளை மதித்து, அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் தமிழக அரசு உறுதியாக முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.