மின்வெட்டை தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாது அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மின்வெட்டை தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழகமெங்கும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிப்பு - தமிழக மக்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் மின்வெட்டுப் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நிகழும் அறிவிக்கப்படாத பலமணி நேர திடீர் மின்வெட்டால் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கோடைக் காலங்களில் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாக திகழும் மின்சாரம், அறிவிக்கப்படாமல் அடிக்கடி தடை செய்யப்படுவது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்லாது அவர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே கொரோனா கால பாதிப்புகளாலும், மின் கட்டண உயர்வாலும் ஏராளமான சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது கடந்த சில தினங்களாக அரங்கேறும் அறிவிக்கப்படாத பலமணி நேர மின்வெட்டுப் பிரச்னையால் சிறு வணிகர்கள் தொடங்கி நிறுவனங்கள் வரை பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் வாக்களித்த மக்களுக்கு வெறும் ஏமாற்றத்தையே வழங்கி வருகிறார். எனவே, தமிழக மக்களின் தற்போதைய தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் தொடர் மின்வெட்டு பிரச்னையை போக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இனி வரும் காலங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டை முற்றிலுமாக தடுத்திட வேண்டும் என மின்சாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com