தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அண்மையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதல்-அமைச்சருக்கு, கவர்னர் கடிதம் எழுதினார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலையிட்டு, இவ்விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்துமாறு கவர்னருக்கு தெரிவித்தார். இதையடுத்து, தனது கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சருக்கு கவர்னர் மீண்டும் கடிதம் எழுதினார்.

இந்நிலையில் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க அனுமதி அளிக்குமாறும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல்அளிக்கும்படியும் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கவர்னருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே, ''கவர்னர் என்பவர் அரசியல்வாதி இல்லை. கவர்னர் அரசியல் பேசக்கூடாது. தனது கடமையை மட்டும் செய்ய வேண்டும்'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, இன்று (ஜூலை 7) மாலை 5 மணிக்கு டெல்லி செல்கிறார். ஒருவாரம் டெல்லியில் தங்கியிருந்து, அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com