

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனை தொடர்ந்து, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்த த.வெ.க. தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஆட்சியமைப்பதற்கு கவர்னர் அழைப்பு விடுத்த பிறகு, தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பார். இந்த நிலையில், தமிழக சட்டமன்றம் கலைக்கப்படுவதாக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் 16-வது சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு ஆட்சியமைத்த நிலையில், அதன் பதவிக்காலம் தற்போது நிறைவடைந்துள்ளது.
அரசியல் சாசன முறைப்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 17-வது சட்டமன்றம் உருவாக்கப்பட்டு புதிய அரசு அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.