தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும் - தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பாக ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை

தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பாக ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் வருகிற ஜூன் மாதத்துக்குள் முடிகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதன்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 8 பேர் கொண்ட அதிகாரிகள் இன்று காலை சென்னை வந்தடைந்தனர். அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை தேர்தல் ஆணைக்குழு தனித்தனியே சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பாக ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தையும் அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் இறந்த வாக்காளர்களை நீக்காமல் வைத்திருக்கின்றனர். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் பற்றி கடந்த முறை தேர்தல் கமிஷனில் முறையிட்டும் இதுவரை அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. எங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக இந்த குழு கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், காங்கிரஸ் சார்பில் மாநில துணைத் தலைவர் ஆர்.தாமோதரன், சட்டப்பிரிவு அமைப்பாளர் எஸ்.கே.நவாஸ் மற்றும் பாரதிய ஜனதா, தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com