11 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ.7.70 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சை பிரிவு மையம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் மருத்துவமனைக்கு அல்லது திட்டத்திற்கு நிதியை வழங்க ஏதுவாகவும்“நலம்TN” என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்
Published on

சென்னை,

மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூபாய் 7.70 கோடி மதிப்பீட்டில் 10 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவு மையங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

தீவிர சிகிச்சை பிரிவு மையம்

மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (22.07.2026) சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தேசிய நல்வாழ்வு குழும அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எச்டிஎப்சி வங்கி பரிவர்த்தனை நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின்கீழ் சிஎஸ்ஆர் (CSR) 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூபாய் 7.70 கோடி மதிப்பீட்டில் 10 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவு மையங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இணையதளம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அரசு மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், நவீன மருத்துவ உபகரணங்களை கொண்டு பொதுமக்களுக்கு தரமான சிகிச்சைகளை வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தொழில் நிறுவன சமூக பொறுப்பு நிதியை (CSR) வெளிப்படைத்தன்மையுடனும், நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் மருத்துவமனைக்கு அல்லது திட்டத்திற்கு நிதியை வழங்க ஏதுவாகவும்“நலம்TN” என்ற இணையதளம் (www.tnhealthfoundation.org) உருவாக்கப்பட்டுள்ளது.

நவீன உபகரணங்கள்

தற்பொழுது எச்டிஎப்சி வங்கி, பரிவர்த்தனை நிறுவனத்தின் சார்பில் கடலூர், தென்காசி, காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பத்தூர், ஈரோடு, மயிலாடுதுறை, ஓசூர், கோவில்பட்டி, பொள்ளாச்சி மற்றும் கும்பகோணம் ஆகிய 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா ரூ.70 இ லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ. 7.70 கோடி மதிப்பீட்டிலான 10 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு மையங்கள் நவீன உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு மையங்களை மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன

ஒவ்வொரு தீவிர சிகிச்சைப் பிரிவிற்கும் 10 எண்ணிக்கையிலான ஏ.பி.எஸ் பேனல், மடக்கும் வசதி கொண்ட பக்கவாட்டு கைப்பிடிகள், 6 அங்குல சக்கரங்கள், குளுக்கோஸ் ஏற்றுவதற்கான வசதி மற்றும் 4 அங்குல மெத்தை கொண்ட 5 அம்ச மோட்டார் இயங்கு படுக்கைகள், ஒரு எக்ஸ்-ரே இயந்திரம், ஒரு ஈ.சி.ஜி இயந்திரம் , ஒரு இதயத் துடிப்பு சீராக்கி, 10 சிரிஞ்ச் பம்ப், 10 மல்டிபாரா மானிட்டர், குழந்தைகளுக்கான ஒரு வென்டிலேட்டர் , 2 பைபேப் இயந்திரம், 2 உறிஞ்சும் கருவி, ஒரு இரத்த வாயு பகுப்பாய்வி, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒரு வென்டிலேட்டர், ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,

11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 10 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு எச்டிஎப்சி வங்கியின் சமூக பொறுப்பு நீதியின் கீழ் (CSR) தலா ரூபாய் 70 இலட்சம் மதிப்பில் மொத்தம் ரூபாய் 7.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 11 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவுகள் இன்றைய தினம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் CSR மற்றும் இதர நன்கொடைகளை வழங்க வேண்டுமென இந்நிகழ்ச்சியின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

கிட்னி திருட்டு

கிட்னி திருட்டு தொடர்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது நாமக்கல் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் மீது நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிட்னி திருட்டு வழக்கில் நேர்மையான, எந்த ஒரு தலையீடும் இல்லாமல் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும்.

டெங்கு பாதிப்பு

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் ஜூலை மாதத்தில் 2024 ஆம் ஆண்டில் 23000, 2025 ஆம் ஆண்டு 11000 என்ற எண்ணிக்கையில் இருந்தது. தற்போது 9000 எண்ணிக்கையில் டெங்கு பாதிப்பு உள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசின் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளில் நாள்தோறும் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளில் பொதுமக்கள் தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

அரசின் நிலைப்பாடு

நீட் தேர்வை பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடே இந்த அரசின் நிலைப்பாடு. ஏழை கிராமப்புற மக்களை பாதிக்கும் நீட் தேர்வு தேவையில்லை என்பது இந்த அரசின் நிலைப்பாடு. நீட் தேர்வு என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது. இது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நிரந்தர தீர்வு

அறவழி முறையில் நடைபெறும் எந்த ஒரு போராட்டத்திற்கும் இந்த அரசு எதிராக இருக்காது. கல்வி என்பது மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்பதே இது போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு. இதை முதல்-அமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். கல்வியில் அந்தந்த மாநிலங்கள் தங்களுடைய முடிவுகளை எடுக்கக் கூடிய வகையில் மத்திய அரசு உரிமைகளை வழங்க வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் மாணவர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.

ஆலோசனைக் கூட்டம்

நாய்க்கடி பாதிப்பு குறித்து மருத்துவத்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுடன் தலைமைச் செயலாளரிடம் ஏற்கனவே ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உரிய நடவடிக்கை

தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் ஏற்கனவே இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணத்தை வசூலிக்கும் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சித்த மருத்துவம் என்பது தமிழ்நாட்டின் பெருமை . சித்த மருத்துவத்தை தமிழ்நாட்டில் மேம்படுத்த வேண்டும். சித்த மருத்துவம் சார்ந்த வேலை வாய்ப்புகள் உருவாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அனீஷ் சேகர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ராஜ்மோகன், எச்டிஎப்சி வங்கியின் துணைத் தலைவர் என். பிரேம் ஆனந்த், மண்டல மேலாளர் ரமேஷ் வங்குரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com