தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: 'உரிமை மீட்க... தலைமுறை காக்க' பாமக லச்சினை வெளியீடு


தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: உரிமை மீட்க... தலைமுறை காக்க பாமக லச்சினை வெளியீடு
x

10 வகையான அடிப்படை உரிமைகள் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் திமுக அரசு தடுத்து வருவதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை, 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை , 5. வளர்ச்சிக்கான உரிமை, 6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை ,8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை , 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை , 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் திமுக அரசு தடுத்து வருகிறது.

அந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும், அதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நாளை மறுநாள் (ஜூலை 25-ஆம் நாள்) வெள்ளிக்கிழமை தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடைய உள்ளது.

அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேற்கொள்ளும் இந்த பயணத்திற்காக ' உரிமை மீட்க... தலைமுறை காக்க' என்ற லச்சினை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த லட்சினையை அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று காலை அவரது சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிட்டார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story