தமிழகத்தின் கல்வி சூழல் கடும் கவலையை ஏற்படுத்துகின்றன - வானதி சீனிவாசன்

கல்விக்கூடங்கள் அறிவை வளர்க்கும் இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, ஆயுதங்களும் வன்முறையும் நுழையும் இடங்களாக மாற கூடாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

தமிழகத்தின் கல்வி சூழல் கடும் கவலையை ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கவலை

சிவகங்கை மாவட்டம் மல்லல் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களுக்கிடையேயான தகராறில் சகமாணவர் கத்தியால் தாக்கப்பட்டதாகவும், அதேபோல் நேற்றைய தினம் திருச்சி திருவெறும்பூர் அரசன்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டதாகவும் வெளியான செய்திகள் தவெக அரசில் தமிழகத்தின் கல்வி சூழல் குறித்து கடும் கவலையை ஏற்படுத்துகின்றன.

அலட்சிய போக்கே காரணம்

அரசு பள்ளிகள் என்றாலே சாதனை மாணவர்கள் என்ற நிலை மாறி சமீப காலங்களாக தொடர்ந்து அவப்பெயரை பெற்று வருவதற்கு பள்ளி கல்வித் துறை மாணவர்கள் நலனில் காட்டும் அலட்சிய போக்கே காரணமாகும். கல்விக்கூடங்கள் அறிவை வளர்க்கும் இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, ஆயுதங்களும் வன்முறையும் நுழையும் இடங்களாக மாற கூடாது. செல்லும் பள்ளிகளிெலெல்லாம் ரீல்ஸ் எடுக்கும் தவெக-வினர் அதில் காட்டும் அக்கறையை மாணவர்கள் நலனில் காட்டியிருந்தாலே இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம்.

துரித நடவடிக்கை

எனவே அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பள்ளிகளில் மனநல ஆலோசனை, நன்னெறிக்கல்வி, மாணவர்களிடையே நட்பு மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கும் சிறப்பு விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும் விதமாக துரித நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com