

சென்னை,
டாஸ்மாக் கடைகளில் முன்பதிவு செய்து மதுபானங்களை பெறும் நடைமுறையை உடனடியாக கைவிடுமாறு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை ஆன்லைனில் புக்கிங் செய்து நேரில் சென்று வாங்கிக் கொள்ளும் நடைமுறையை டாஸ்மாக் நிர்வாகம் நாளை முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, உணவகங்களுடன் கூடிய மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குதல் ஆகிய முடிவுகளை ஊடகங்களின் மூலம் கசியவிட்டு, பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையடுத்து பின்வாங்கிய தவெக அரசு, தற்போது ஆன்லைன் மூலமாக மதுபானங்கள் முன்பதிவு என்ற மேலும் ஒரு தவறான முடிவை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மதுப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அரசு நிர்வாகம், மது வாங்குவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தி ஊக்குவிப்பதும் அதன் மூலம் அரசின் வருவாயைப் பெருக்க நினைப்பதும் சமூக நலனுக்கு முற்றிலும் எதிரான நடவடிக்கையாகும்.
எனவே, அரசு நிர்வாகத்திற்கு மதுபானங்கள் மூலமாக கிடைக்கும் வருவாயை விட மக்களின் நலனே முக்கியம் என்பதை உணர்ந்து, டாஸ்மாக் கடைகளில் முன்பதிவு செய்து மதுபானங்களை பெறும் நடைமுறையை உடனடியாக கைவிடுமாறு டாஸ்மாக் நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.