

குன்னம்:
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நேரு(வயது 41). இவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 22-ந் தேதி செங்குணம் வழியாக மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். செங்குணம் பிரிவு சாலை வழியாக சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் நேரு சாலையில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.