மாணவர்கள் மனதை ஆசிரியர்கள் அன்புடன் கையாள வேண்டும் - நயினார் நாகேந்திரன்

தற்கொலை எதற்கும் தீர்வாகாது என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மாணவர்கள் மனதை ஆசிரியர்கள் அன்புடன் கையாள வேண்டும் - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

எனதன்பு மாணவக் கண்மணிகளே, தற்கொலை எதற்கும் தீர்வாகாது! மதுரை அலங்காநல்லூர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் 11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், விருதுநகர் காரியாபட்டி அரசுப் பள்ளியில் சக மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் அடித்து கேலி செய்ததால் 6 ஆம் வகுப்பு மாணவன் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள், எனது மன அமைதியையே குலைத்து விட்டன.

அன்பு எனும் குடை

கல்வியின் துணையுடன் காலத்தை வெல்ல வேண்டிய நம் குழந்தைச் செல்வங்கள், மரணத்தின் வாசற்படியை இப்படி அவசரமாக அடைய நினைப்பதும், அதற்கு ஏதோவொரு வகையில் இச்சமூகம் காரணமாக அமைவதும் நமது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இறகை விடவும் மிக மென்மையான மனநிலை கொண்ட, மழலை செல்வங்களின் உளவியல் சிந்தனைகளை வலுப்படுத்துவதில் கல்விக்கூடங்களும், ஆசிரியப் பெருமக்களும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர். எனவே, மாணவர்களை “அன்பு” எனும் குடையின் கீழ், ஆசிரியர்கள் அரவணைத்து வழிநடத்த வேண்டும். குழந்தைச் செல்வங்களை மிக கவனமாக கையாள வேண்டும்.

தற்கொலை எதற்கும் தீர்வாகாது

அதே சமயம், ஒரு அரசியல் கட்சியின் தலைவராக அல்லாமல், அன்புள்ள அப்பாவாக, அக்கறை கொண்ட ஒரு தோழனாக அனைத்து மாணவக் கண்மணிகளிடமும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். வாழ்க்கையில் எத்தனை ஆயிரம் சோதனைகள் வந்தாலும், உங்கள் குடும்பத்தாரிடமோ, நெருங்கியவர்களிடமோ பகிர்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சியுங்கள். தற்கொலை எதற்கும் தீர்வாகாது!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com