

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மையார் குப்பம் கிராமத்தில் உள்ள ஆந்திர பஸ் நிறுத்தத்தில் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை விற்பதாக ஆர்.கே. பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் நேற்று அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அம்மையார் குப்பம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பித்து ஓடினார்.
உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதில் அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் ஆர்.கே. பேட்டை ஒன்றியம் சிவலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் (வயது 24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.