சிறுமி மீது நண்டை விட்டு பாலியல் சீண்டல் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

காரைக்காலில் சிறுமி மீது நண்டை விட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிறுமி மீது நண்டை விட்டு பாலியல் சீண்டல் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Published on

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த தமிழக பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் காரைக்கால் நகர பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர், வீட்டின் எதிரே தனியாக அமர்ந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த அதே பகுதியை சேர்ந்த மைக்கேல் (வயது 23), ஆற்றில் பிடித்த உயிருள்ள நண்டை சிறுமியின் தொடையில் விட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அலறி துடித்தார். அப்போது சிறுமியின்கைகளை பிடித்து மைக்கேல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மைக்கேலின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் மைக்கேலை காரைக்கால் நகர போலீசில் உறவினர்கள் ஒப்படைத்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com