மெரினாவில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் படுகொலை

சென்னை மெரினாவில் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
மெரினாவில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் படுகொலை
Published on

சென்னை,

சென்னையை அடுத்த ஆவடி முக்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 20). ஐ.டி.ஐ. படித்துள்ள இவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் லாரி நிறுவனம் ஒன்றில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவருக்கு பிறந்த நாள். நண்பர்களுடன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். மது விருந்தும் அமர்க்களப்பட்டது.

பின்னர் விக்னேஷ் தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரை பகுதிக்கு வந்தார். உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் கடற்கரை பகுதியில் உற்சாகமாக விளையாடினார்கள். அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் அங்கு கடைகளில் தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள் சிலர், விக்னேசின் நண்பர்களின் உல்லாச கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அடித்துக்கொலை

இதையொட்டி அவர்களுக்குள் அடி-தடி மோதல் ஏற்பட்டது. விக்னேசையும், அவரது நண்பர்களையும், கடை ஊழியர்கள் கட்டையால் அடித்து தாக்கினார்கள். இதில் விக்னேசுக்கு பலத்த அடிபட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து பரிதாபமாக இறந்து போனார்.

கடை ஊழியர்களின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விக்னேசின் நண்பர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கடற்கரை மணலில் விக்னேஷ் பிணமாக கிடந்தார். நேற்று காலையில் கடற்கரை மணலில் நடை பயிற்சி செய்ய வந்தவர்கள், விக்னேஷ் பிணமாக கிடப்பதை பார்த்து, அண்ணாசதுக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

3 பேர் பிடிபட்டனர்

திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில் அண்ணாசதுக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விக்னேசின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விக்னேசின் நண்பர்கள் இருவரும் காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள்.

இது தொடர்பாக மெரினா கடற்கரை கடை ஊழியர்கள் 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். கடைகளில் திருட வந்தவர்கள் என்று நினைத்து தாக்குதல் நடத்தி விட்டோம் என்று அவர்கள் போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர். அண்ணாசதுக்கம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாட வந்த விக்னேஷ், விதியின் விளையாட்டால், உயிரை விட்டு, பிணமாக வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com