

தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள கொக்குகுளத்தைச் சேர்ந்த விவசாயி காளிராஜ் (வயது 32), புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பித்தார். அப்போது பழங்கோட்டை மின்வாரிய வணிக ஆய்வாளர் கருப்பசாமி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜ் இதுகுறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தைப் பெற்றுக் கொண்ட கருப்பசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.