நடுக்கடலில் நடந்த பயங்கரம்: இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேசுவரம் விசைப்படகு மூழ்கடிப்பு

நடுக்கடலில் ராமேசுவரம் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலை வைத்து மோதி மூழ்கடித்தனர். இதனால் கடலில் விழுந்து தத்தளித்த 7 மீனவர்கள் மற்ற மீனவர்களால் மீட்கப்பட்டனர்.
நடுக்கடலில் நடந்த பயங்கரம்: இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேசுவரம் விசைப்படகு மூழ்கடிப்பு
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்தனர்.

அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த வஸ்தியான் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகில் டேனியல், சேதுராமன், ஆகாஷ், பிலிஸ்மென், ஜெயபாலன், சுரேந்திரன், டைட்டன் ஆகிய 7 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து கப்பல் ஒன்றில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தைச் சேர்ந்த அந்த விசைப்படகின் மீது வேகமாக மோதினர். இதில் படகு உடைந்து கடலில் மூழ்க தொடங்கியது. அதில் இருந்த 7 மீனவர்களும் கடலுக்குள் விழுந்தனர். படகு மீது மோதிய பின்னர், ரோந்து கப்பல் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது.

மீனவர்கள் மீட்டனர்

7 மீனவர்களும் உயிருக்கு போராடிய நிலையில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள், விரைந்து செயல்பட்டு 7 மீனவர்களையும் மீட்டனர்.

பின்னர் அவர்களை நேற்று காலை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

உளவு பிரிவு போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து, உயிர்தப்பிய மீனவர்களிடமும், படகு உரிமையாளரிடமும் மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இலங்கை ரோந்து கப்பல் மோதி, படகு மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் குறித்து படகு உரிமையாளர், ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com