

சென்னை,
மத்திய அரசின் ஏற்றுமதி-இறக்குமதி விவரங்கள் குறித்து ஆண்டுவாரி வர்த்தக பகுப்பாய்வுக்கான தேசிய ஏற்றுமதி-இறக்குமதிகளை பதிவு செய்திடும் நிர்யாத் நிறுவனம் ஆண்டுதோறும் ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த நிர்யாத் நிறுவனம் 2024-25-ம் ஆண்டுக்கான ஜவுளி ஏற்றுமதிகள் குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள ஜவுளி துணிகளின் மதிப்பு 36,610 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கோடி). இதில் தமிழ்நாடு மட்டும் 7,997.17 மில்லியன் டாலர் (ரூ.73 ஆயிரத்து 925 கோடி) மதிப்புடைய ஜவுளித் துணிகளை ஏற்றுமதி செய்து, ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டினை அடுத்து, தொழில் வளர்ச்சியில் எப்போதும் முன்னணியில் நிற்கும் மாநிலங்களான குஜராத் 2-ம் இடமும், மராட்டியம் 3-ம் இடமும் பெற்றுள்ளன. இந்த நிலையில் திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஜவுளி ஏற்றுமதி: திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29 சதவீதம் வளர்ச்சி! குஜராத்தையும், மராட்டியத்தையும் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம்!
2020-2021-ல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 21.84 சதவீதம்!
இவை அனைத்தையும் சொல்வது நாமல்ல, மத்திய அரசு! சாதனைகளைச் சொல்லி வெல்வோம் ஒன்றாக! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.