

தஞ்சாவூர்,
தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் மோத்திரப்ப சாவடியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 25 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளியாக இருந்து வந்தார். அவரது மனைவி சித்ரா(61), கணவரை அன்புடன் பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் செல்வராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கணவர் உயிரிழந்த செய்தியை தாங்கிக்கொள்ள முடியாமல் சோகத்தில் இருந்த சித்ரா, வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
45 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தம்பதியினர் மரணத்திலும் பிரியாமல் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.