

சென்னை,
தமிழகத்திற்கு கடல்சார் ஏற்றுமதி மண்டலம் வழங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில், 2,500 ஏக்கர் பரப்பளவில் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் இந்தியாவின் முதல் கடல்சார் ஏற்றுமதி மண்டலத் திட்டத்தை (MEZ) அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
இத்திட்டம் இப்பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், கடல் உணவு ஏற்றுமதியை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தவும், மீனவப் பெருமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பெரிதும் துணைநிற்கும். மேலும், இதன் மூலம் இப்பகுதிகளில் சுமார் 1.8 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், மாநிலத்தின் தொழில் வளர்ச்சியையும் மேம்படுத்தும் இத்தகைய தொலைநோக்குத் திட்டத்தை வழங்கிய மதிப்பிற்குரிய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.