கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியையிடம் 3வது நாளாக விசாரணை

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவியிடம் 3வது நாளாக இன்று விசாரணை நடந்து வருகிறது. #CollegeStudents
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியையிடம் 3வது நாளாக விசாரணை
Published on

சென்னை,

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டின் பேரில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு அருப்புக்கோட்டை போலீசிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நிர்மலாதேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி முடிவு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் மாஜிஸ்திரேட்டு, நிர்மலாதேவியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.

நிர்மலாதேவியை துன்புறுத்தக்கூடாது என்றும், 25-ந்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் அவர் உத்தரவிட்டார். அவருக்கு தேவையான உணவு, உடை வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று 8 மணி நேரமாக சோதனை நடத்தினர். சோதனை நடைபெற்ற நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, வீட்டிற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சீல் வைத்தனர். கணினி, ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவியிடம் 3வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com