

சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சட்டமன்றத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 4¾ ஆண்டுகளில் செய்த திட்டங்களில் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் வரவேற்கக்கூடியது. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மூலதன செலவுகள் அதிகரித்து இருக்கவேண்டும். ஊரக வளர்ச்சி திட்டத்தில் மொத்த வரவீனங்கள் ரூ.3,46,316 கோடியாகும். மொத்த செலவு ரூ.4,67,264 கோடியாக உள்ளது. இதில் மாநில செலவீனம், சம்பளம் உள்ளிட்டவை ரூ.94,378 கோடியாகும். மேலும் பராமரிப்புக்காக ரூ.18,785 கோடி செலவிடப்பட்டுள்ளது. உதவித்தொகை உள்ளிட்ட செலவீனங்களுக்காக ரூ.1,56,108 கோடியும், ஓய்வூதியம் உள்ளிட்ட செலவீனங்களுக்காக ரூ.45,323 கோடியும், வட்டி செலுத்துதலுக்காக ரூ.78,677 கோடியும், இவற்றில் மூலதன செலவீனம் ரூ.59,562 கோடியை ஒப்பீட்டளவில் பார்த்தால் உயர்த்தி இருக்கவேண்டும்.
இந்த நிதி ரூ.60,024 கோடி தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் முறையான சமூகநீதி இல்லை. இதனால் பெரும் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து இந்திய அளவில் முதன்மை மாநிலமாக உருவாகி வருவது ஏற்புடையதல்ல. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தங்கு தடையின்றி விற்கப்படுவது மனித வளத்திற்கு உகந்தது அல்ல.
ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கிராம வளர்ச்சியும், குடிநீர், சாலை மேம்பாடு, தெருவிளக்கு, சுகாதாரப்பணிகள் போன்ற பொதுமக்களின் அடிப்படை தேவைகள், அன்றாடத்தேவைகள் உள்ளிட்டவைகளோடு எரிசக்தித்துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு போதுமானதல்ல. மின்சாரத்தேவை அதிகரித்துள்ளதால், மின் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும்.
நீரின்றி அமையாது உலகு என்பார்கள். நீர்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு பாசன கால்வாய் திட்ட மேம்பாட்டிற்கு போதுமானதல்ல. இந்த ஆட்சிக்காலத்தில் கடந்த காலங்களில் பெய்த மழையினால் காவிரி, பாலாறு, தென்பெண்ணை, பவானி, வைகை, தாமிரபரணி உள்ளிட்டஅனைத்து ஆறுகள் மூலம் மழைநீர் வீணாக கடலில் கலப்பது ஏற்புடையதல்ல. ஒரு சொட்டு மழை நீர்கூட கடலில் கலக்க கூடாது என்பது பாமகவின் நிலைப்பாடு. ஆறுகளில் தடுப்பணைகள் அதிக அளவு கட்டி நீரை தேக்கி வைக்க வேண்டும். இதற்கு அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைப்போல வேளாண் விஞ்சானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை ஏற்றால் உற்பத்தி செலவில் 50 சதவீதம் லாபம் கிடைக்கும் என்ற கருத்தை நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த 18 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை பாமகவால் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை பின்பற்றியிருந்தால் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைத்திருக்கும்.
2021-22 காலத்தில் தமிழ்நாட்டின் மொத்த அரசுக் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக இருந்தது. 2025-26 பட்ஜெட் மதிப்பீட்டின்படி மொத்த கடன் ரூ.9.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மார்ச் 2027-க்கு கடன் ரூ.10.7 லட்சம் கோடி வரை உயரலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற கடன் தொகை ரூ.5.70 லட்சம் கோடி, ஐந்தே ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் பெற்று தமிழ்நாட்டின் கடனை இரட்டிப்பாக்கியதே திராவிட மாடல் அரசின் சாதனை. இது சாதனை அல்ல. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.