

சென்னை,
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு நேரத்தில் ஏன் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விடுவதற்கு அவசரம் காட்டி, அதே ஊரடங்கு காலத்திலேயே ஆன்லைனில் டெண்டர் தாக்கல் செய்ய தேதியையும் நிர்ணயித்தீர்கள் என்று முதல்-அமைச்சரும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டால், அமைச்சர் ஜெயக் குமார் சம்மன் இல்லாமல் ஆஜராகி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் துறையின் ஊழலை மறுப்பதில் இவருக்கு என்ன சொந்த லாபம்? அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர்களின் மதிப்பீடுகள் தயாரிக்கும் லட்சணமும், ஆன்லைன் டெண்டர்களில் நடக் கும் கூத்துக்களும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
டெண்டர் குறித்து பல வழக்குகள் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்து, அ.தி. மு.க. ஆட்சியின் டெண்டர் முறைகேடுகளைப் பார்த்து நல்லோர் அனைவரும் கைகொட்டிச் சிரித்துள்ளார்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கும், அதில் அமைச்சராக உள்ள ஜெயக்குமாருக்கும் நல்லாட்சி தந்த தி.மு.க. பற்றி பேசுவதற்கோ அல்லது அப்பழுக்கற்ற பொதுவாழ்வினை தனது அசையாச் சொத்தாக வைத்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றிக் குறை கூறுவதற்கோ சிறிது கூட யோக்கியதை மட்டுமல்ல; அருகதையே இல்லை.
இந்த நேரத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நான் ஒரேயொரு சவால் விடுகிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் விடப்பட்ட பராமரிப்பு டெண்டர்கள், இந்த தஞ்சாவூர் டெண்டர் எல்லாவற்றையும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.