4 நாள் தொடர் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

4 நாள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியம் கோரிக்கை விவாதம் நடக்கிறது.
4 நாள் தொடர் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 19-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதுவரை, 16 நாட்கள் 39 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.

இன்று மீண்டும் கூடுகிறது

இந்த நிலையில், கடந்த மாதம் 30 மற்றும் மே 1-ந்தேதி சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரசு விடுமுறை நாளாகும். நேற்று முன்தினம் (2-ந்தேதி) சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதால் அரசு விடுமுறை. இப்படி, 4 நாள் தொடர் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (புதன்கிழமை) மீண்டும் கூடுகிறது.

இன்றைய கூட்டம் வழக்கம்போல், காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

அமைச்சர்கள் பதில்

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பேசுகிறார்கள். இறுதியாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com