

சென்னை,
தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எஸ்.பழனி நாடார் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செல்வ மோகன்தாஸ் பாண்டியன், 370 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதையடுத்து, பழனி நாடார் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அதேபோல, புதுச்சேரி சட்டசபை தேர்தலில் டி.ஆர்.பட்டினம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட என்.நாக தியாகராஜன் வெற்றி பெற்றார். 5 ஆயிரத்து 511 வாக்குகள் வித்தியாசத்தில் அவரிடம் பா.ஜ.க. வேட்பாளர் மனோகரன் தோல்வி அடைந்தார். அதையடுத்து தேர்தலில் நாக தியாகராஜன் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனோகரன் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த 2 வழக்குகளும் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. வழக்குகளை விசாரித்த நீதிபதி, இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம், தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், காரைக்கால் எம்.எல்.ஏ. நாக தியாகராஜன் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். விசாரணையை ஆகஸ்டு 21-ந் தேதிக்குத் தள்ளிவைத்தார்.