

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 514 மனுக்கள் பெறப்பட்டு அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கம் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 3 பயனாளிகளுக்கு, ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கைக் கால்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.