கோபாலபுர குடும்பத்தின் ஊழல் ராசிபுரம் வரை பரவி இருக்கிறது - அண்ணாமலை

ஊழல் கும்பலான திமுக ஆட்சியை விரட்டியடிக்கவேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
கோபாலபுர குடும்பத்தின் ஊழல் ராசிபுரம் வரை பரவி இருக்கிறது - அண்ணாமலை
Published on

ராசிபுரம்,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக அரசியல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தப்போகும் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலை எதிர்நோக்கி தமிழகமே காத்திருக்கிறது. மக்களுக்கான நல்லாட்சியை வழங்க வேண்டும் என்ற உறுதியுடன் மக்களோடு நிற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் டாக்டர். பிரேம்குமாரை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், தமிழகம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தியதே பிரேம்குமாரின் மக்கள் பணிக்கு எடுத்துக்காட்டு. இப்படி மக்களோடு களத்தில் நின்று பணியாற்றும் மனிதரை ராசிபுரம் மக்கள் மகத்தான வெற்றி பெற செய்வார்கள் என்பது உறுதி.

ஆனால், இவரை எதிர்த்து களத்தில் நிற்கும் திமுகவின் மதிவேந்தன் அவர்களால் மக்களுக்கு என்ன பயன்? கடந்த 5 ஆண்டுகள் எல்லோருக்கும் எல்லாம் என்று மார்தட்டி கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ராசிபுரம் பகுதியில் முறையான பேருந்து வசதிக்கூட வழங்க முடியவில்லை. கோபாலபுர குடும்பத்தின் ஊழல் ராசிபுரம் வரை பரவி இருக்கிறது. இப்படிபட்ட ஊழல் கும்பலான திமுக ஆட்சியை விரட்டியடிக்கவேண்டும்.

ராசிபுரத்தின் தலையெழுத்தை மாற்றி, நமது அடுத்த தலைமுறையை வறுமைப்பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் பிரேம்குமாரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! ராசிபுரம் தொகுதி மென்மேலும் வளரட்டும்!

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com