

சென்னை,
தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
இனப்படுகொலையின் காயங்களோடு வாழும் ஈழத்தமிழர்களை அவமதிப்பதா? ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டின் தொப்புள்கொடி உறவுகள். நமது ரத்தச் சொந்தங்கள். ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் கொடூரத்தால் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து, தாய்த் தமிழகத்தில் அடைக்கலம் தேடி வாழ்ந்து வருகின்றனர்.
இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடியும், நீதிக்காகக் குரல் கொடுத்தும் உலகம் முழுவதும் ஈழத்தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். செம்மணி மனிதப் புதைகுழிகளின் உண்மைகள் முழுமையாக வெளிச்சத்திற்கு வர வேண்டும். சர்வதேச நீதிப் பொறிமுறையின் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இன்றளவும் நாமும், நமது ஈழச் சொந்தங்களும் காத்திருக்கிறோம். இனப்படுகொலையால் ஏற்பட்ட ஆழமான காயங்களில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் இருக்கும் நமது ரத்தச் சொந்தங்கள், தங்கள் தொப்புள்கொடி உறவுகளின் தாயகமான தமிழ்நாட்டிலாவது கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ முடியாதா? நீதிக்காக உலகத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும் நமது சொந்தங்கள், தாய்த் தமிழகத்திலும் அவமானத்தையும் அவமரியாதையையும் எதிர்கொள்ள வேண்டுமா? மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் அங்கு வசிக்கும் ஈழத்தமிழர்களை, அரசு அதிகாரி ஒருவர் தகாத வார்த்தைகளால் செருப்பால் அடிப்பேன் என்று பேசியதோடு, கன்னத்திலும் அறைந்து உள்ளதாக செய்தி ஊடகங்களில் சமூக ஊடகங்களில் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
இதையே ஆதாரமாக வைத்து, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகவும் வெளிப்படையாகவும் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பணிநீக்கம் செய்வதோடு, கைது செய்து கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முகாம்களிலும் வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இனப்படுகொலையின் காயங்களோடும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலியோடும் நீதி தேடும் நமது இரத்தச் சொந்தங்களைத் தாய்த் தமிழகத்திலேயே அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். நமது தொப்புள்கொடி உறவுகளின் கண்ணியத்தை அரசு வேடிக்கைப் பார்க்குமானால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நேரடியாகக் களமிறங்கி தொடர் சனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.