ஓட, ஓட விரட்டி டிரைவர் வெட்டிக்கொலை

கோவையில் ஓட, ஓட விரட்டி டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஓட, ஓட விரட்டி டிரைவர் வெட்டிக்கொலை
Published on

கோவை

கோவையில் ஓட, ஓட விரட்டி டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

டிரைவர்

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி என்ற சத்திய பாண்டி(வயது 32). டிரைவர். இவர் நேற்று இரவு நவ இந்தியாவில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடை அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அந்த கும்பல் திடீரென்று அரிவாளால் சத்தியபாண்டியை வெட்டினர். இதனால் அச்சம் அடைந்த சத்தியபாண்டி உயிர் பிழைக்க அங்கிருந்து ஓடத்தொடங்கினார். இருப்பினும் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்தி சென்றது.

வெட்டிக்கொலை

அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க சத்தியபாண்டி சாலையோரம் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் விரட்டி சென்று வீட்டுக்குள் புகுந்து வெட்டியது. இதனால் சத்திய பாண்டி சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சத்தியபாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம்

காந்திபுரம் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் பிஜூ என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சத்தியபாண்டிக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக சத்தியபாண்டி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். எனவே அந்த முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com