அமைச்சர் பொன்முடி வீட்டில் பீரோ சாவி இல்லை என கூறிய உதவியாளர்: பூட்டு திறக்கும் தொழிலாளியை அழைத்து வந்த அமலாக்கத்துறையினர்

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் பீரோவை திறக்க சாவி இல்லாததால் போலி சாவி மூலம் பீரோவை திறக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அமைச்சர் பொன்முடி வீட்டில் பீரோ சாவி இல்லை என கூறிய உதவியாளர்: பூட்டு திறக்கும் தொழிலாளியை அழைத்து வந்த அமலாக்கத்துறையினர்
Published on

விழுப்புரம்,

சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணிநேரமாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் விழுப்புரத்தில் உள்ள வீட்டிலும் அதிகாரிகள் தீவிரமாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் உள்ள பீரோ மற்றும் லாக்கரின் சாவி இல்லாததால் நீண்ட நேரம் அதிகாரிகள் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

நீண்ட நேரம் காத்திருந்த பின் போலி சாவி தயாரிக்கும் நபரை அமலாக்கத்துறை அதிகாரிகள் வரவழைத்துள்ளனர். போலி சாவி மூலம் பீரோ, லாக்கரை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பீரோ, லாக்கர்களின் சாவி இல்லை என அமைச்சரின் உதவியாளர் கூறியதால் பூட்டுத் திறக்கும் நபர் வரவழைக்கப்பட்டார்.

எனவே, பூட்டுத் திறக்கும் நபரின் உதவியோடு பீரோ, லாக்கர்களை திறந்து சோதனையிட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், லாக்கரை திறப்பதற்கு முயற்சி செய்தும் திறக்க முடியாததால், பீரோவை மட்டும் திறந்து சோதனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அமலாக்கத்துறை அதிகாரிகளின் அழைப்பின் பேரில், இந்தியன் வங்கி அதிகாரி அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் வங்கியில் மேற்கொண்டுள்ள பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com