

சென்னை,
சென்னை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பிரசார குழு செயலாளர் நாஞ்சில் சம்பத், துணை பொது செயலாளர் ராஜ்மோகன், மாநில செய்தி தொடர்பாளர் ராவுத்தர் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-
அண்ணா, வைகோவை பார்த்து அரசியலுக்கு வந்தேன். ஆனால் இன்று வைகோ தனது கட்சியை அறிவாலயத்தில் அடக்கம் செய்து விட்டு அமர்ந்திருக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு வீட்டுக்கும் பிரிட்ஜ் வழங்குவதாக கூறியுள்ளார். வெற்றி பெற்றால் பிரிட்ஜ் என சொல்லவில்லை, பிரிஞ்ஜி சாதம் என்று சொன்னேன் என மாற்றி கூறி விடுவார்.
எங்கள் தலைவரின் வருகை வளர்ச்சியை கண்டு அறிவாலயத்தின் கால்கள் ஆடுகிறது. தி.மு.க.வில் 26 கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.விலும் 10 கட்சிகள் கூட்டணி உள்ளது. எங்கள் தலைவர் 36 கட்சிகளை ஒன்றாக எதிர்க்கிறார். தி.மு.க.வை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். தி.மு.க.வே வாடகை பேச்சாளரை நம்பித்தான் உயிர் வாழ்கிறது.
வி.சி. குகநாதன், பாண்டியராஜன், வடிவேலு, பொன்வண்ணன் ஆகியோர்களை நம்பி உள்ளது. 2011-ம் ஆண்டு தேர்தலில் தே.மு.தி.க.விற்கு எதிராக பேசியதால் சினிமா வாய்ப்பை இழந்தவர் வடிவேலு.
இவ்வாறு அவர் கூறினார்.