பட்டாசு ஆலை விபத்து நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்-ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

பட்டாசு ஆலையில் விபத்து நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.
பட்டாசு ஆலை விபத்து நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்-ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்
Published on

பட்டாசு ஆலையில் விபத்து நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.

ஆறுதல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்தில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயம் அடைந்தனர். வெடிவிபத்து நடந்த பகுதிகளை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார் நேற்று பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத்தொடர்ந்து அவர், கலெக்டர் அனிஷ்சேகர் உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் இது குறித்து மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பட்டாசு வெடி விபத்து சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் போர்கால அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அதன்படி தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.

விசாரணை

இது போன்ற விபத்து எதிர்காலத்தில் நடக்க கூடாது. எனவே அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டும். பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசு செயலாற்ற வேண்டும். மதுரை மாவட்டத்தில் செயல்படும் பட்டாசு ஆலைகளை எல்லாம் கணக்கெடுத்து அங்கெல்லாம் அரசு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா?, ஊழியர்களின் பாதுகாப்புக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என்பதனை ஆய்வு செய்ய வேண்டும்.

தற்போது நடந்த விபத்து குறித்து முழு அளவில் விசாரணை நடத்தினால் தான் எதிர்காலத்தில் இனி இது போன்ற விபத்துகள் நடப்பதை தவிர்க்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com