

சேலம்,
கொரோனா தொற்று பரவலை கண்காணித்து, கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு சேலம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரம் (23-ந் தேதி வரை) நீட்டிக்கப்படுகிறது. அதிகளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.
வருகிற 1-ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் கொரானா பெருந்தொற்றை கட்டுக்குள் வைக்கும் வகையில் கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகள் கூடுதலாக நடைமுறைப்படுத்தப்படும்.
சேலம் மாநகராட்சி எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளி, நகைக்கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் ஆகியவை மாலை 6 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், இவை ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. சேலம் செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி ரோடு, பால் மார்க்கெட், லீபஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
வ.உ.சி. மார்க்கெட், சின்னகடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும். ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மால்கள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் திறந்த வெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து கடைகளும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாமலும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.