

சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேசிங்கு (வயது 59). மீனவரான இவர், திருவொற்றியூர் குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கட்டுமரத்தில் தனியாக கடலுக்கு சென்றார். இந்த நிலையில், கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் வலையில் கால் சிக்கியதில் கடலில் மூழ்கி தடுமாறினார். இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய மீனவர்கள், கடலில் மூழ்கி மயங்கி கிடந்த தேசிங்கை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.