விசுவாசத்தின் உச்சம்: எஜமானியை காப்பாற்ற பாம்பிடம் போராடி உயிரை மாய்த்த நாய்

கன்னியாகுமரி மாவட்டம், பிரம்மபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் திடீரென வந்த 7 அடி நீளமுள்ள ஒரு நல்லபாம்பு படம் எடுத்து நின்றது.
நல்லபாம்பிடம் போராடி உயிரிழந்த நாய்
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் நாய் ஒன்று தனது எஜமானியை காப்பாற்ற பாம்பிடம் போராடி உயிரை மாய்த்துக் கொண்ட, விசுவாசத்தின் உச்சம் தொட்ட சம்பவம் நடந்துள்ளது.

2 வயது நாய் சிஞ்சான்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியில் வசித்து வருபவர் விகேஷ் (வயது 35). இவர் திருவனந்தபுரம் கோட்டத்தில் ரெயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களோடு காயத்ரியின் தாயார் பத்மகுமாரியும் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் சிஞ்சான் என்ற 2 வயது நாய் ஒன்றையும் வளர்த்து வந்தனர்.

படம் எடுத்து நின்ற நல்லபாம்பு

நேற்று முன்தினம் மாலை பத்மகுமாரி வீட்டின் பின்புறம் உள்ள திண்ணையில் இருந்து இரவு சமையல் செய்வதற்கான பொருட்களை எடுத்து தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த இடத்தின் அருகில் திடீரென சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு நல்லபாம்பு படம் எடுத்து நின்றது. இதை பார்த்ததும் பத்மகுமாரி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு விகேசும், அவரது மனைவியும் வீட்டின் பின்புறம் ஓடோடி வந்தனர். அதே நேரத்தில் வீட்டின் முன்புறம் படுத்திருந்த நாய் சிஞ்சானும் அங்கே ஓடி வந்து பத்மகுமாரியின் முன்னே படம் எடுத்து நின்ற பாம்பை கவ்வி பிடிக்க முயன்றது.

நாயின் விசுவாசம்

அப்போது பாம்பு சீறியபடி சிஞ்சானை கடித்தது. இதனால் ஆவேசமடைந்த அந்த நாய், பாம்பை கடித்து 2 துண்டாக்கி சின்னாபின்னமாக்கியாகியது. பின்னர் சிறிது நேரத்தில் சிஞ்சான் தரையில் மயங்கி விழுந்து இறந்தது. அதேபோல் உடல் துண்டான பாம்பும் இறந்தது. தனக்கு தினமும் சோறு போட்டு வளர்த்த எஜமானியை காப்பாற்றுவதற்காக பாம்பிடம் போராடி தனது உயிரை மாய்த்துக்கொண்ட செல்லப்பிராணியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com