

சென்னை,
மதிமுக எம்.பி. துரை வைகோ தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கவனக்குறைவால் ஏற்படும் உயிரிழப்பு என்பது ஏற்கமுடியாத குற்றம்; தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய துயரம்.
திருச்சி அரசு தலைமை பொதுமருத்துவமனையில் செவிலியராக இரண்டாமாண்டு படித்து வரும், எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம், தொண்டைமான் விடுதி பகுதியை சேர்ந்த விவசாயி மகள் சீதாலட்சுமி என்ற இளம் மாணவி தனது மூக்கில் ஏற்பட்டுள்ள சிறு கட்டியை அகற்றுவதற்கு, தான் நர்சிங் படிப்பை மேற்கொண்டு வரும் அதே திருச்சி அரசு தலைமை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சை மூலம் மூக்கு கட்டியை அகற்றுவதற்கு தயாரான மருத்துவர்கள், அந்த பெண்ணுக்கு (anaesthesia) மயக்கமருந்து கொடுக்கும் போது ஏற்பட்ட கவனக்குறைவால் இதய துடிப்பு சீரிழந்து, சற்று நேரத்தில் நாடித்துடிப்பு குறைந்து மரணமடைந்துள்ளார்.
இளம் வயதில் சிறு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர் மாணவி தீடீரென்று இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பெற்றோர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் நம்ப முடியாத இம்மரணத்தால் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அதே நேரத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
செவிலியர் மாணவி செல்வி சீதாலட்சுமி குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்வதுடன், இறந்த மாணவிக்கு எனது இதய அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.
மேலும், ஒரு இளம் மாணவியின் உயிரிழப்பிற்கான காரண காரியங்களை ஆராய்ந்து, தமிழ்நாடு அரசும் மருத்துவமனை நிர்வாகமும் உரிய விசாரனை நடத்தி, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் மற்றும் ஒட்டுமொத்த மருத்துவமனை நிர்வாகமும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.