‘கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் சட்டமன்றம் நாகரிகமாக இருந்தது’ - தமிழிசை சவுந்தரராஜன்

சட்டமன்றத்தை ஒரு நாகரிகமான அரசியல் மன்றமாக மாற்ற வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
‘கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் சட்டமன்றம் நாகரிகமாக இருந்தது’ - தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை,

பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“நான் சிறுவயதில் சட்டமன்றத்திற்கு எனது தந்தையுடன் சென்று, அங்குள்ள கேலரியில் அமர்ந்து பார்த்திருக்கிறேன். முன்னாள் முதல்-அமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, எனது அப்பா குமரி அனந்தன் போன்றவர்கள் இருந்த காலத்தில் சட்டமன்ற விவாதங்களை பார்ப்பதற்கே ஆசையாக இருக்கும். இந்த சபை ஒரு நாகரிகமான சபை, நாகரிகமான தலைவர்கள் அமர்ந்திருக்கின்ற சபை என்ற எண்ணம் தோன்றும்.

தற்போது தமிழக சட்டமன்றத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மிகச் சிறப்பாக வழிநடத்துகிறார். ஆனால் அவரே வெறுத்துப் போகும் அளவிற்கு சிலர் நடந்து கொள்கின்றனர். மக்கள் தற்போது நேரலையில் சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கிறார்கள். இளைஞர்கள் அதிகமாக பார்க்கிறார்கள். அது ஒரு ஆரோக்கியமான விஷயம். சட்டமன்றம் முன்பு போல் நாகரிகமான விவாதங்கள் நடைபெறும் சபையாக இருக்க வேண்டும். அதன் மரபை பாதுகாக்க வேண்டும். சட்டமன்றத்தை அனைவரும் ஒரு நாகரிகமான அரசியல் மன்றமாக மாற்ற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com