அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் 8-ந் தேதி நடக்கிறது; எடப்பாடி பழனிசாமிக்கு, பிரதமர் மோடி அழைப்பு

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 8-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்தார்.
அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் 8-ந் தேதி நடக்கிறது; எடப்பாடி பழனிசாமிக்கு, பிரதமர் மோடி அழைப்பு
Published on

சென்னை,

உலக நாடுகளைப் போன்று, இந்தியாவிலும் கொரோனா நோய் பரவி வருவதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி அவ்வப்போது மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, வரும் 8-ந் தேதி (புதன்கிழமை) அனைத்து கட்சி தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

நாடாளுமன்றத்தில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் அன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை நடத்துகிறார். அப்போது, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்தும், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை குறித்தும் அனைத்து கட்சி தலைவர்களுடன் விவாதிக்க இருக்கிறார்.

இந்தநிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திரமோடியே பல கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில், நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 8-ந் தேதி நடைபெறும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்தார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்பதாக உறுதி அளித்திருப்பதாக தெரிகிறது.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com