‘நீட் தேர்வு கூடாது என்பதற்கான அவசியம் இந்தியாவில் தற்போது அதிகமாக உணரப்படுகிறது’ - ஜி.கே.வாசன்

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது மத்திய அரசின் பொறுப்பற்ற செயல்பாடு என ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
‘நீட் தேர்வு கூடாது என்பதற்கான அவசியம் இந்தியாவில் தற்போது அதிகமாக உணரப்படுகிறது’ - ஜி.கே.வாசன்
Published on

மதுரை,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“இன்று நாட்டில் நடக்கும் மாணவர் பிரச்சினைகள், தேர்வு சம்பந்தமான பிரச்சனைகள், குறிப்பாக நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து தேர்வு ரத்தானதால் மாணவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், இதையெல்லாம் பார்க்கும்போது நீட் தேர்வு கூடாது என்பதற்கான அவசியம் இந்தியாவில் தற்போது அதிக அளவில் உணரப்படுகிறது.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நீட் தேர்வு வேண்டும் என்று சொல்பவர்கள் கூட, நீட் தேர்வு வேண்டாம் என்று யோசிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மாணவர்களுடைய பிரச்சனைகளை மத்திய அரசு பொறுப்போடு அணுகவில்லை என்பதுதான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கருத்து.

குறிப்பாக மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை மத்திய அரசின் பொறுப்பற்ற செயலாகவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. எதிர்கட்சிகளின் தலைவர்கள் மாணவர்களுக்காக போராட்டம் நடத்தும்போது அவர்களை கைது செய்வதெல்லாம் அச்சுறுத்துவது போல இருக்கிறது.

மாணவர்களிடம் காவல்துறையினர் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்பதற்கு பத்திரிகை செய்திகளும், தொலைக்காட்சி செய்திகளும் சான்றாக உள்ளன.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com