

சென்னை,
தமிழக மின்வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 31ந்தேதி நிலவரப்படி தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் பிரிவில் வீடுகளுக்கு 2.12 கோடி இணைப்புகளும், வணிகத்திற்கு 36.44 லட்சம் இணைப்புகளும், தொழிற்சாலைகளுக்கு 7.47 லட்சம் இணைப்புகளும், விவசாயத்திற்கு 21.40 லட்சம் இணைப்புகளும், குடிசைகளுக்கு 11.20 லட்சம் இணைப்புகளும், இதர பிரிவில் 14.17 லட்சம் இணைப்புகளும், உயர் மின் அழுத்த பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 10,229 என மொத்தமாக 3.3 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் இருந்தது.
இதன் பிறகு நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய மின்இணைப்புகளை பெற்று வருவதால், தற்போது மின்பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1ந்தேதி நிலவரப்படி தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் பிரிவில் வீடுகளுக்கு 2.27 கோடி இணைப்புகளும், வணிகத்திற்கு 35.37 லட்சம் இணைப்புகளும், தொழிற்சாலைகளுக்கு 7.38 லட்சம் இணைப்புகளும், விவசாயத்திற்கு 21.81 லட்சம் இணைப்புகளும், குடிசைகளுக்கு 9.89 லட்சம் இணைப்புகளும், இதர பிரிவில் 14.30 லட்சம் இணைப்புகளும், உயர் மின் அழுத்த பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 10,030 என மொத்தமாக 3.16 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளது. இது முந்தைய கணக்கீட்டை விட அதிகமாகும்.
இதனையடுத்து மின்நுகர்வும் அதிகரித்துள்ளது. அதாவது வீடுகளுக்கு 32,714 மில்லியன் யூனிட், வணிகத்திற்கு 6,738 மில்லியன் யூனிட், தொழிற்சாலைகளுக்கு 8,384 மில்லியன் யூனிட், விவசாயத்திற்கு 12,956 மில்லியன் யூனிட், குடிசைகளுக்கு 393 மில்லியன் யூனிட், இதர பிரிவில் 3,242 மில்லியன் யூனிட் என மொத்தம் 93,344 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து புதிதாக மின்இணைப்பு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அடுத்து வரும் நாட்களில் மொத்த மின்பயனீட்டாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்து உள்ளனர்.