

கமுதி,
கமுதி அருகே நெறிஞ்சுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாயிரம் (வயது 70). இவர் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் மான்கறி சமைத்து கொண்டிருப்பதாக, கோவிலாங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப்-இன்ஸ்பக்டர் சக்திகணேஷ் தலைமையிலான போலீசார், அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, விசாரணை நடத்த வந்தவர்கள் போலீசார் என தெரியாமல், எனது தோட்டத்தில் மான்கறி இருந்தது, அதை எடுத்து சமைத்து கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார். பின்னர் போலீசார் என்று தெரிய வந்த பின்பு, இது மான்கறி அல்ல, ஆட்டுக்கறி என்று மாற்றி கூறியுள்ளார். இவ்வாறு முன்னுக்கு, பின் முரணாக அவர் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், அப்பகுதியில் மான் தோல் அல்லது அதன் உடல் உறுப்புகள் எதுவும் கிடக்கிறதா? என தேடி பார்த்துள்ளனர். எதுவும் கிடைக்காததால் சந்தேகத்தின் பேரில் கண்ணாயிரத்தை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர் சமைத்து வைத்த கறியையும் வனத்துறை வசம் ஒப்படைத்தனர். முதியவர் சமைத்தது மான் கறிதானா? என்பதை உறுதி செய்ய வனத்துறையினர் ராமநாதபுரத்துக்கு எடுத்து சென்றனர்.