

ஆக்கிரமிப்பு
பொன்னேரி வழியாக ஆரணி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் இருபுற கரைகளிலும் குண்ணமஞ்சேரி, சின்னக்காவனம், எம்.ஜி.ஆர். நகர், பொன்னேரி, திருவாயர்பாடி, கள்ளுக்கடைமேடு, ஆலாடு பூந்தோட்ட காலணி ஆகிய இடங்களில் 881 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வரும் நிலையில் தனியார் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் ஆரணி ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்தார். இதனை அடுத்து சென்னை ஐகோட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டது.
முற்றுகை
அதன்படி பொன்னேரி வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி நோட்டீஸ் வழங்கினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற 881 குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதனை தொடர்ந்து ஆலாடு ஊராட்சியில் உள்ள பூந்தோட்ட காலனி பகுதி சேர்ந்த பொதுமக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடினர்.
பின்னர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்ற பொன்னேரி நீர்வளத் துறையினர் நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் மனுவை பெற்றுக்கொண்டு உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதை ஏற்று அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.