

சென்னை
இந்தியாவில் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மைக்காலமாக இடைவிடாமல் பெய்த மழையால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இதனால் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் சந்தைகளில் வெங்காயத்தின் வரத்து குறைந்தது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெங்காயத்தின் மொத்த விலையும் சில்லறை விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான மராட்டிய மாநிலம் லசல்கோன் சந்தையில், கடந்த வார நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை 45 ரூபாயாக உயர்ந்தது.
கடந்த வாரத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் சில்லறை விலை சென்னையில் 38 ரூபாயாகவும் கொல்கத்தாவில் 48 ரூபாயாகவும் மும்பையில் 56 ரூபாயாகாவும் டெல்லியில் 57 ரூபாயாகவும் இருந்தது.
நாட்டின் தற்போதைய வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு தொடரும் எனவும் இதனால் வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால், இன்னும் சில நாட்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நூறு ரூபாயை கடந்து விடக்கூடும் எனத் தெரிகிறது.
தற்போது பெரும்பான்மையான ஓட்டல்களில் பிரியாணிக்கு தயிர் வெங்காயத்துக்குப் பதிலாக தயிர் வெள்ளரிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில், வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் துறைசார்ந்த அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் தனியாரிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து குறைந்த விலையில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக மக்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. விலை குறைப்பு நடவடிக்கை தொடர்பாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.