

சென்னை,
த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
'ஆட்சி' மாறினால் 'காட்சி' மாறும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே வாக்களித்த மக்களிடம் உண்டு. அதுபோன்ற எதிர்பார்ப்பில்தான் தற்போது த.வெ.க. கையில் ஆட்சியை வழங்கியிருக்கிறார்கள்.
த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்று 88 நாட்கள் ஆகும் நிலையில், தங்களுடைய அரசின் முதல் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்திருக்கிறது. நேற்று முன்தினம் (5-ந் தேதி) பொது பட்ஜெட்டும், நேற்று (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்தது. 'ஆட்சி' மாறியவுடன் 'காட்சி' மாறுவதுபோன்ற மனநிலையை மக்களுக்கு இது ஏற்படுத்தினாலும், எதிர்கால திட்டமிடலுடன் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இது எதிரொலித்ததா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
பொதுவாக, ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் மக்கள் எதிர்பார்ப்பது, ஆளுங்கட்சி தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா? என்பதாகத்தான் இருக்கும். இந்த முறையும் தேர்தலின்போது த.வெ.க. அளித்த வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கிறதா? என்ற தேடல் மக்களிடம் இருக்கிறது.
த.வெ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகளில், மணப்பெண்ணுக்கு 1 பவுன் தங்கம், பட்டுச்சேலை வழங்குவது, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியது போன்றவை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
அதே நேரத்தில், மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும், ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் இடம்பெறவில்லை. இந்த 2 அறிவிப்புகளையும் மிகவும் எதிர்பார்த்த பெண்களுக்கு சற்று ஏமாற்றம்தான்.
இதுதவிர, துறை வாரியாக செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்கும், செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிவிப்புகளை பொறுத்தவரை முந்தைய ஆட்சியாளர்களிடம் இருந்து சற்று மாற்றம் ஏற்பட்டதுபோல் தெரிந்தாலும், நிதி மேலாண்மையை பொறுத்தவரை தடுமாற்றத்தை காட்டுவதாகவே தெரிகிறது.
தமிழக அரசின் தற்போதைய கடன் அளவு ரூ.10.98 லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது, ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் என்ற அளவில் கடன் சுமை உள்ளது.
இதுமட்டுமல்லாமல், இந்த நிதி ஆண்டில் (2026-27) ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடி கடன் பெற திட்டமிடப்பட்டிருப்பதாகவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, வாங்கிய கடனுக்கு ஆண்டுதோறும் அதிக அளவில் வட்டி கட்டப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மட்டும் ரூ.78,683 கோடி வட்டி கட்டப்பட உள்ளது.
இந்த வட்டித்தொகை அடுத்த நிதியாண்டில் (2027-28) ரூ.89,698 கோடியாகவும், 2028-29-ம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 256 கோடியாகவும் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, கடன் வாங்கும் அளவு குறையப்போவதில்லை என்பதையே இது காட்டுகிறது.
தமிழக பட்ஜெட்டே ரூ.4 லட்சம் கோடிக்குத்தான் போடப்படுகிறது. வரவு அதைவிட குறைவாக இருப்பதால், பற்றாக்குறை அதிகரிக்கிறது. அதை சமாளிக்க கடன் வாங்கப்படுகிறது. த.வெ.க. அரசின் கடந்த 3 மாதகால ஆட்சியில் மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறும்போது, "தமிழக அரசின் நிதிநிலையை சீரமைக்க 2 ஆண்டுகள் தேவைப்படும்" என்று கூறியுள்ளார்.
அதேநேரத்தில், நிதித்துறை செயலாளர் சித்திக், "தமிழக அரசின் கடன் 50 ஆண்டுகள் கடந்தாலும் இருந்து கொண்டேதான் இருக்கும். அதை குறைக்க முடியாது" என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.
அப்படி என்றால், இனி தமிழ்நாட்டின் கடன் அளவு குறையவே குறையாதா?, ஒவ்வொருவரும் கடன் சுமையுடன் தான் அழைய வேண்டுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடன் வாங்கும் அளவை குறைக்க வேண்டும் என்றால், செலவை குறைக்க வேண்டும். ஆனால், கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளைப் போல், த.வெ.க. அரசும் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருப்பதால், அதை நிறைவேற்றும்போது செலவு அதிகரிக்கத்தான் செய்யும்.
வரியை உயர்த்த வேண்டும் என்றாலும், பெரும்பாலான வரிகள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வருவதால், மத்திய அரசால் மட்டுமே வரி உயர்வை கொண்டுவர முடியும். சொத்து வரி, மின் கட்டணம், பஸ் டிக்கெட் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவற்றை மாநில அரசே உயர்த்த முடியும் என்றாலும், மக்கள் மத்தியில் எதிர் வினைகளை உருவாக்கும் என்பதால், அதற்கு ஆட்சியாளர்கள் முன்வருவது கடினம்.
தற்போதைய நிலையில், தமிழக அரசால் மதுபானத்துக்கான வரி, வணிக வரி உள்பட ஒருசில இணங்களில் மட்டுமே வரிகளை மாற்றியமைக்க முடியும். அரசின் தேவையை பார்க்கும்போது, இதுபோன்ற இணங்களின் வரியை உயர்த்தினாலும், பெரிய அளவில் கைகொடுக்காது.
எனவே, த.வெ.க. அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் மட்டும் சுமார் ரூ.9 லட்சம் கோடி கடன் வாங்கும் நிலையே உள்ளது. நடப்பாண்டில் மட்டுமே ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் கோடி கடன் வாங்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், நிதி மேலாண்மையை கையாள்வதில் த.வெ.க. அரசு தடுமாறுவதாகவே தெரிகிறது. அதாவது, பட்ஜெட் அறிவிப்புகளில் சில ஆரோக்கியமான மாற்றங்கள் தென்பட்டாலும், நிதி நிலைமையை பார்க்கும்போது, அதை சரிசெய்ய அரசு தடுமாறுவதையே பார்க்க முடிகிறது.