

சென்னை,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி நாளை மறுநாள் (16-ந்தேதி) முதல் தொடங்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை ஏற்பாட்டு முறை (EMS) வாயிலாக வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளை சமவாய்ப்பு முறையில் ஒதுக்கீடு செய்வதற்காக, தேர்தல் நடத்தும் அலுவலர் வாயிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் இரண்டாம் நிலை சமவாய்ப்புக்குட்படுத்தப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளை இரண்டாம் நிலை சமவாய்ப்புக்குட்படுத்துதல் குறித்த விரிவான அறிவுறுத்தல்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/evm-vvpat என்ற வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.
நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளை இரண்டாம் நிலை சமவாய்ப்புக்குட்படுத்துதல் 11.04.2026 முதல் 16.04.2026 வரையிலும், வேட்பாளரின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பதிவேற்றமானது 16.04.2026 முதல் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தச் செயல்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் / அவர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெறும். வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளின் மற்றும் இருப்புக்காப்பிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளின் பட்டியல்கள் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பகிரப்படும். இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகள் மட்டுமே, வாக்குப்பதிவு நாளன்று, ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.