குழவி கல்லை தலையில் போட்டு தொழிலாளி கொலை

சிவகாசியில் குழவி கல்லை தலையில் போட்டு தொழிலாளியை மனைவியின் அண்ணன் காலை செய்தார்.
குழவி கல்லை தலையில் போட்டு தொழிலாளி கொலை
Published on

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது33). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா (29). இருவரும் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அய்யனார் (7) பவித்ரா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

மாரிச்செல்வத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து பிரியா, தன் அண்ணன் மகேந்திரனிடம் கூறி அழுதுள்ளார். இதை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிச்செல்வத்தை, மகேந்திரன் நேரில் பார்த்து பேசி உள்ளார்.இந்தநிலையில் நேற்று மாலை மாரிச்செல்வம் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மகேந்திரன் வீட்டில் இருந்த குழவி கல்லை எடுத்து மாரிச்செல்வம் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாரிச்செல்வம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாரிச்செல்வத்தின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தை சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்ஜெயன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com