

சென்னை,
தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து தனியாருக்கு மாற்றி வழங்கப்படுவதாகவும், ஆக்சிஜன் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், வெண்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளது எனவும் பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் தாமாக முன்வந்து வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்தனர்.
பின்னர், இதுகுறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணுக்கு உத்தரவிட்டனர்.
சுப்ரீம்கோர்ட்டு முடிவு
அப்போது, தற்போதைய நிலையில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவில்லை. மற்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்திலும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும், தமிழகத்தின் நிலைமையை அறிய விரும்புவதாலும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளோம் என்று நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
பின்னர், இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆஜராகி கூறியதாவது:-
இதேபோன்ற வழக்குகள் 6 மாநில ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்டு உள்ளதால், அவற்றை ஒன்றாக சேர்த்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வேவை நீதிமன்றத்திற்கு உதவும் நபராக சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது.
31 ஆயிரம் குப்பிகள்
இந்த ஐகோர்ட்டு (நேற்று) காலையில் எழுப்பிய சந்தேகங்களுக்கு. சுகாதார துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் கேட்டேன். அவர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் பின்வரும் புள்ளிவிவரங்களை கூறுகிறேன்.
ரெம்டெசிவர் மருந்தை பொருத்தவரை அரசு மருத்துவமனைகளில் 31 ஆயிரம் குப்பிகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் சிலவற்றில் இருப்பு இல்லாமல் இருக்கலாம். அரசிடம் கேட்டால், ரூ.4 ஆயிரத்து 800 சந்தை மதிப்புள்ள ஒரு குப்பியை ரூ.783-க்கு வழங்க தயாராக உள்ளோம்.
அதேபோல, ஆக்சிஜனை பொருத்தவரையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 400 டன் மற்றும் புதுச்சேரியில் 150 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. 1,167 டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளது.
ஆனால் தற்போதைய ஆக்சிஜன் தேவை என்பது 250 டன் மட்டுமே.
பற்றாக்குறை இல்லை
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு 65 டன் ஆக்சிஜன் தமிழகத்தில் இருந்து அனுப்பியதால், தமிழகத்தில் ஆக்சிஜன் எவ்வித பற்றாக்குறையும் இல்லை. வெண்டிலேட்டர் இருப்பை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் 9 ஆயிரத்து 600 வெண்டிலேட்டர்களில், 5 ஆயிரத்து 887 கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள 6 ஆயிரம் வெண்டிலேட்டர்களில், 3 ஆயிரம் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தற்போது 84 ஆயிரத்து 621 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் வெண்டிலேட்டர் அல்லது ஆக்சிஜன் தேவைப்படும் நிலை இல்லை.
பதற்றம் இல்லை
தமிழகத்தில் படுக்கை, ஆக்சிஜன், வெண்டிலேட்டர் என எதிலும் பற்றக்குறை இல்லை என்று திட்டவட்டமாக கூறுகிறேன். கொரோனா பரவலில் பதற்றமான நிலை என தமிழகத்தில் தற்போது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவம் அல்லாத வேறு பயன்பாட்டிற்கு ஆக்சிஜன் அனுப்பக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.
குழுவை அமைக்கவேண்டும்
இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் ஆகியவற்றின் தேவை அறிந்து உடனடியாக முக்கிய முடிவுகளை எடுக்க அரசின் செயலாளர் அல்லது கூடுதல் செயலாளர் அல்லது சார்பு செயலாளர் தலைமையில் குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு ரெம்டெசிவர், ஆக்சிஜன், வெண்டிலேட்டர், தடுப்பூசிகள் ஆகியவற்றின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.
தேர்தல் ஆணையத்திடம் பேசி வாக்கு எண்ணிக்கையின் நாளன்றும், அதன் பின்னர் வரும் நாட்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க உரிய ஆலோசனைகளை நடத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரம்ஜான் பண்டிகை வர உள்ளதால், அதுகுறித்தும் அரசு ஆலோசனை நடத்தி முடிவு வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
விலை குறைப்பு
மேலும், போதிய ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியாத பிற மாநிலங்களுக்கு, தமிழ்நாட்டில் பற்றாக்குறை ஏற்படாத வகையில் ஆக்சிஜனை கொடுத்து உதவி செய்யலாம்.
18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான கட்டணமாக அரசு மருத்துவமனைகளில் ரூ.400, தனியார் மருத்துவமனையில் ரூ.600 வசூலிக்கபடும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த தொகை நாட்டில் பெருமளவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்புடையது அல்ல. ஓர் ஆண்டு ஊரடங்கினால், அவர்கள் வருமானத்தை இழந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு தடுப்பு ஊசி விலையை குறைத்து நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். தமிழகத்தில் தடுப்பூசி எவ்வளவு உள்ளது? என்பது குறித்து தமிழக அரசு வருகிற 26-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.