வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்ைட அடுத்த இடையான்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரி(வயது50). இவரது கணவர் இறந்துவிட்டார். மகன், மகள்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இதனால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் 4 பேர் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
சத்தம்கேட்டு கோடீஸ்வரி திடுக்கிட்டு எழுந்தார். அப்போது 4 பேரும் நகை, பணத்தை எங்கே வைத்துள்ளாய்? என கேட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த நகையை கழற்றித்தரும்படி மிரட்டியுள்ளனர். கோடீஸ்வரி மறுக்கவே அவரது கை, கால்களை கட்டி தாக்கினர். பின்னர் அவர் அணிந்து இருந்த 7½ பவுன் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டதோடு பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி கயிறுகளை அவிழ்த்து வெளியே வந்த கோடீஸ்வரி கூச்சலிட்டார்.
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காயமடைந்த கோடீஸ்வரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகின்றனர்.






