திருவண்ணாமலை வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் உள்பட 5 பேர் சென்னை கோர்ட்டில் சரண் 4-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவு

திருவண்ணாமலையில் செல்போன் கடையில் வேலை பார்த்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 5 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 4-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
திருவண்ணாமலை வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் உள்பட 5 பேர் சென்னை கோர்ட்டில் சரண் 4-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவு
Published on

பிராட்வே,

திருவண்ணாமலையை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 28). இவர் அப்பகுதியில் உள்ள அய்யங்குளத்தெருவில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 29-ந்தேதி செல்போன் கடையில் நாகராஜை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்தது. இது தொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கொலை செய்யப்பட்ட நாகராஜ் கடந்த ஆண்டு சென்னை நெசப்பாக்கம் பாரதி நகர் பகுதியில் தங்கியிருந்து பிரபலமான ஒரு கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கார்த்திகேயனின் மனைவி மஞ்சுளா என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. மஞ்சுளாவின் கள்ளக்காதல் உறவை நேரில் பார்த்த அவருடைய மகன் ரித்தேஷ் சாய் (10) அதை தந்தை கார்த்திகேயனிடம் தெரிவித்தான். இதனால் மனைவி மஞ்சுளாவை கணவர் கண்டித்ததால் அவர் கள்ளக்காதலை கைவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் தனது கள்ளக்காதல் துண்டிக்கப்பட காரணமாக இருந்ததாக நினைத்து சிறுவன் ரித்தேஷ் சாயை காரில் கடத்திச்சென்றார். பின்னர் சேலையூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி அடித்துக்கொலை செய்தார். இந்த வழக்கில் நாகராஜை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் கடந்த 9 மாதங்களாக சிறையில் இருந்த நாகராஜ் கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்ததும், சென்னையில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்ற அச்சத்தில் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்று செல்போன் கடையில் வேலைக்கு சேர்ந்ததும், அப்போது அவரை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் கொலை கும்பலை பிடிக்க திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் ஆகியோர் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் கொலை கும்பலை தீவிரமாக தேடிவந்தனர்.

சென்னையிலும் முகாம் அமைத்து தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் மகனை கொலை செய்த ஆத்திரத்தில் இருந்து வந்த மஞ்சுளா தனது கள்ளக்காதலனான நாகராஜை பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் கூலிப்படை மூலம் நாகராஜை வெட்டிக்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மஞ்சுளாவை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ஜார்ஜ் டவுன் 7-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பஷீர் முன்னிலையில் மஞ்சுளா மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையினரான சூளைமேட்டைச் சேர்ந்த தினேஷ் குமார்(19), அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஷியாம் சுந்தர்(20), சந்தோஷ் குமார்(19), சரவணன்(20) ஆகியோர் சரண் அடைந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சரண் அடைந்த 5 பேரையும் வருகிற 4-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் அவர்கள் 5 பேரையும் 4-ந்தேதி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து சரணடைந்த 5 பேரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். மஞ்சுளா மீது சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ரூ.1 லட்சத்திற்கு கள்ளத்துப்பாக்கி வாங்கியதாக வழக்கு உள்ளது.

இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த மஞ்சுளா கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com